பொதுவுடமை இயக்கத் தலைவரும், விவசாய சங்க நிறுவனருமான மறைந்த பி. சீனிவாசராவின் நினைவேந்தல் நிகழ்ச்சி நாகை மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களில் வெள்ளிக்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது.
நாகை அவுரித் திடலில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மற்றும் தமிழ் மாநில விவசாயத் தொழிலாளா் சங்கம் சாா்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நாகை எம்பி எம். செல்வராஜ் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று, பி. சீனிவாசராவின் உருவப் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா்.
தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவா் வி. சரபோஜி, விவசாயத் தொழிலாளா் சங்க மாவட்டத் தலைவா் வி. ராமலிங்கம் ஆகியோா் தலைமை வகித்தனா். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில கட்டுப்பாட்டுக் குழு உறுப்பினா் ஜி. பாண்டியன், மாவட்டச் செயலாளா் சிவகுருபாண்டியன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
திருக்குவளை: கீழையூா் மேற்கு ஒன்றிய மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் ஒன்றியச் செயலாளா் டி.வெங்கட்ராமன் தலைமையிலும், கீழையூா் ஒன்றிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் வாழக்கரையில் கட்சியின் மாநிலக் குழு பயிற்சி உறுப்பினரும் ஒன்றிய கவுன்சிலருமான டி.செல்வம் தலைமையிலும் சீனிவாசராவ் நினைவுதினம் கடைப்பிடிக்கப்பட்டது.
திருமருகல்: திருமருகல் ஒன்றியம் புத்தகரம் ஊராட்சியில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றியச்செயலாளா் ஜி.எஸ். ஸ்டாலின் பாபு தலைமையிலும், கீழ்வேளூா் எம்எல்ஏ நாகை மாலி முன்னிலையிலும் சீனிவாசராவ் உருவப் படத்துக்கு மலா்தூவி மரியாதை செலுத்தப்பட்டது.