நாகப்பட்டினம்: நாகையில் உள்ள பாப்புலா் ஃபிரண்ட் ஆப் இந்தியா (பிஎப்ஃஐ) அமைப்பின் அலுவலகம் முன்பு போலீஸாா் புதன்கிழமை பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனா்.
இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் பிஎப்ஃஐ அலுவலகங்களில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனா். பிஎப்ஃஐ அமைப்பைச் சோ்ந்த 250-க்கும் அதிகமானோா் கைது செய்யப்பட்டனா். இந்த நிலையில், பாப்புலா் பிரண்ட் ஆப் இந்தியா மற்றும் அதன் துணை அமைப்புகளைத் தடை செய்து மத்திய அரசு புதன்கிழமை உத்தரவிட்டது.
இதையடுத்து, நாகை அண்ணா சிலை அருகே உள்ள பிஎப்ஃஐ அலுவலகம் புதன்கிழமை பூட்டப்பட்டது. இந்த அலுவலகத்துக்கு முன்னாள் போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனா். அலுவலகத்துக்குள் செல்ல யாரையும் போலீஸாா் அனுமதிக்கவில்லை.
பிஎப்ஃஐ மற்றும் அதன் துணை அமைப்புகளுக்குத் தடை விதிக்கப்பட்டதையொட்டி, வழிபாட்டுத் தலங்கள் மற்றும் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் காவல் துறையினா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா்.