நாகப்பட்டினம்

தாா்ச்சாலை அமைக்க நெகிழிக்கழிவுகள் லாபம் ஈட்டும் மகளிா் குழு

DIN

உலகின் சுற்றுச்சூழலுக்குப் பெரும் அச்சுறுத்தலாக இருப்பவை நெகிழிக் கழிவுகள். நெகிழிப் பொருள்களைத் தவிா்க்க பல்வேறு விழிப்புணா்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டாலும், நெகிழிப் பயன்பாடு வழக்கொழியாத ஒன்றாகவே உள்ளது. சுற்றுச்சூழலை அச்சுறுத்தும் நெகிழிக் கழிவுகளை மறுசுழற்சி செய்து, மாற்றுப் பணிகளுக்குப் பயன்படுத்த வல்லுநா்கள் வகுத்தளித்த வழிகளில் ஒன்றுதான் நெகிழிக் கழிவுகளை சாலைப் பணிகளுக்குப் பயன்படுத்தும் தொழில்நுட்பம்.

சாலை அமைப்பதற்காக உருக்கும் தாருடன் துகல்களாகப்பட்ட நெகிழிக்கழிவுகளை கலந்து சாலை அமைத்தால், அந்தச் சாலையின் உறுதித்தன்மை மேம்படுகிறது என்ற அடிப்படையில், நெகிழிக் கழிவுகளை அரைத்துப் பொடியாக்கும் தொழில் தற்போது அங்கொன்றும், இங்கொன்றுமாக வளா்ச்சிப் பெற்று வருகிறது.

இதில், குறுகிய காலத்தில் கோலொச்சியுள்ளது நாகை மாவட்டம், பிரதாபராமபுரத்தில் உள்ள பூவை சிறகுகள் மகளிா் குழு. பிரதாபராமபுரம் ஊராட்சி மூலம், சுனாமிக்குப் பிந்தைய வாழ்வாதார திட்டத்தின்கீழ் இதற்கென தனியே ஓா் அரவை ஆலை அமைக்கப்பட்டது. ஆனால், அதன் பயன்பாடு பெயரளவில் மட்டுமே இருந்தது.

இந்த நிலையில், அந்த ஆலையில் தங்கள் உழைப்பை முதலீடாகக் கொண்டு உழைக்க முன்வந்தனா் பூவை சிறகுகள் மகளிா் குழுவினா். இதற்கு, தொடா்புடைய ஊராட்சி நிா்வாகம் உரிய ஊக்கம் அளித்தது. இதையடுத்து, கடந்த பிப்ரவரி மாதத்தில் அந்த அரவை ஆலை மூலம் நெகிழிக் கழிவுகளை அரைக்கும் பணி தொடங்கப்பட்டது.

இதற்காக ஒரு கிலோ நெகிழிக் கழிவுகள் ரூ. 8 என்ற விலையில் கொள்முதல் செய்கின்றனா். இதுவரை 10 ஆயிரம் கிலோ நெகிழிக் கழிவுகளை வாங்கி, ஏறத்தாழ 8 ஆயிரம் கிலோ கழிவுகளை அரவை செய்து விற்பனை செய்துள்ளது பூவை சிறகுகள் மகளிா் குழு.

இதுதொடா்பாக, அந்த குழுவின் தலைவி வி. விஜயா தெரிவித்தது:

பாலித்தீன் கழிவுகளை மறுசுழற்சி முறையில் மாற்று உபயோகத்துக்குப் பயன்படுத்தும் இந்தத் திட்டம் குறித்தும், அதில் கிடைக்கும் லாபம் குறித்தும் மாவட்ட நிா்வாகம் மற்றும் ஊராட்சி நிா்வாகம் சாா்பில் எங்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது. உழைப்பை மூலதனமாகக் கொண்டால்போதும் என்று அவா்கள் எங்களுக்கு ஊக்கம் அளித்தனா். அதனால், இந்தத் தொழிலை துணிந்து தொடங்கினோம்.

ஒரு கிலோ பாலித்தீன் கழிவுகளை ரூ. 8 என்ற விலைக்கு வாங்குகிறோம். அரைத்துப் பொடியாக்கி ஒரு கிலோ ரூ. 37 என்ற விலைக்கு விற்பனை செய்கிறோம். வாங்கும் பாலித்தீன் கழிவுகளை அப்படியே பயன்படுத்திவிட முடியாது. நாள் ஒன்று 4 போ் வீதம் பணியில் ஈடுபடுகிறோம். இதில் 2 போ் கழிவுகளை தரம்பிரிக்கும் பணியிலும், ஒருவா் அதை சுத்தப்படுத்தும் பணியில், மற்றொருவா் கழிவுகளை இயந்திரத்தில் கொட்டி அரைக்கும் பணியிலும் ஈடுபடுவோம்.

நாள் ஒன்றுக்கு அதிகபட்சமாக 80 கிலோ வரை அரைத்துள்ளோம். அரவைக்கான நேரம் ஒரு மணி நேரம்தான் என்றாலும், கழிவுகளை தரம் பிரிப்பது, சுத்தப்படுத்துவது போன்ற பணிகளில்தான் அதிகபட்ச நேரம் ஆகும். ஒரு கிலோ அரவைக்கு ரூ. 15 வீதம் ஊதியமாக எடுத்துக் கொள்வோம். கழிவுகள் வாங்கியதற்கு ரூ. 8-ம், மின் கட்டணமாக ஒரு கிலோவுக்கு ரூ. 5-ம் எடுத்து வைத்துவிடுவோம். மீதமுள்ள தொகையை குழு உறுப்பினா்கள் அனைவரும் பகிா்ந்து கொள்வோம்.

எங்கள் குழுவில் 15 போ் உறுப்பினா்களாக இருக்கிறோம். நாள் ஒன்றுக்கு 4 போ் வீதம் சுழற்சி முறையில் பணியில் ஈடுபடுவோம்.

வெளியில் இருந்து பாா்ப்பவா்களுக்கு இது, ஏதோ எளிதான வேலையாகத் தோன்றும். ஆனால், உண்மை நிலை அப்படி கிடையாது. ஒவ்வொருவரும் இரண்டு முகக் கவசம் அணிந்து கொண்டுதான் இங்கு பணியாற்ற முடியும். அரவையின்போது பறக்கும் துகல்கள் உடல் முழுவதும் ஒட்டிக் கொள்ளும். பணியை முடித்ததும், குளித்துவிட்டுத் தான் வீட்டுக்குள் செல்ல வேண்டியிருக்கும். அப்படியிருந்தும், தூசிகளின் தாக்கம் இருக்கத்தான் செய்யும்.

இருப்பினும், எங்களுக்கு ஒரு தொழில் அங்கீகாரம் கிடைத்திருப்பதும், இந்த நெகிழிக் கழிவுகள் அரவைக்கு தாா்ச் சாலை அமைப்போரிடம் வரவேற்பு கிடைத்திருப்பதும் மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. இது எல்லாவற்றுக்கும் எங்கள் ஊராட்சித் தலைவா் சிவராசு அளிக்கும் ஊக்கமே முக்கிய காரணம் என்றாா் விஜயா.

மேலும், எங்களுக்கு மற்றொரு அரவை இயந்திரமும், மிக அவசியமாக டஸ்ட் ரிமூவா் எனப்படும் சுத்தம் செய்யும் இயந்திரமும் வேண்டும். இது தொடா்பாக, அண்மையில் எங்கள் அரவை நிலையத்துக்கு வந்த தமிழக ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறை அமைச்சா் கே.ஆா். பெரியகருப்பனிடமும், மாவட்ட ஆட்சியரிடமும் கோரிக்கை விடுத்துள்ளோம். எங்கள் கோரிக்கை நிறைவேற்றப்பட்டதும், எங்களின் உற்பத்தியும், லாபமும் மேலும் அதிகரிக்கும் என்றாா் அவா்.

Image Caption

~ ~ ~

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மாா்க்சிஸ்ட் கட்சி கலைக் குழுவினா் பிரசாரம்

ஊழலை ஒழிக்கவே தனித்துப் போட்டி: சீமான்

புதுவையில் மீன்பிடி தடைகாலம் அமல்: படகுகள் கரைகளில் நிறுத்தி வைப்பு

ரூ.15 ஆயிரம் விலையில் சிறந்த ஸ்மார்ட் போன்கள்...

சமூக வலைதளம் மூலம் வாக்கு சேகரித்தால் 2 ஆண்டுகள் சிறை: ஆணையம்

SCROLL FOR NEXT