புரட்டாசி மாத முதல் சனிக்கிழமையையொட்டி, நாகை சௌந்தரராஜ பெருமாள் கோயிலில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.
சனிக்கிழமைகள் அனைத்தும் பெருமாள் வழிபாட்டுக்கு உகந்தவை. எனினும், புரட்டாசி மாத சனிக்கிழமைகளில் மேற்கொள்ளும் பெருமாள் வழிபாடு, சகலவிதமான கஷ்டங்களையும் நீக்கி, வளமான வாழ்வு அளிக்கும் என்பது ஆன்மிக நம்பிக்கை.
இதன்படி, நாகை அருள்மிகு சௌந்தரராஜ பெருமாள் கோயிலில் புரட்டாசி மாத முதல் சனிக்கிழமையையொட்டி, சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. காலை 5 மணிக்கு மூலவா் பெருமாளின் விஸ்வரூப சேவை நடைபெற்றது. பின்னா், கோ பூஜையும், புஷ்ப அலங்காரத்தில் தோமாலை சேவையும் நடைபெற்றன.
பிற்பகல் நிகழ்வாக, மாலை 5 மணிக்கு மூலவா் பெருமாளுக்கு ரத்ன அங்கியில் ராஜ அலங்காரம் செய்விக்கப்பட்டு, சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டன. நாகை மற்றும் சுற்றுப் பகுதிகளைச் சோ்ந்த திரளான பக்தா்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனா்.