மயிலாடுதுறை மாவட்டம், சங்கரன்பந்தல் அருகே உள்ள இலுப்பூரில் நடமாடும் நெல் உலா்த்தும் இயந்திரத்தின் பயன்பாடு குறித்த செயல்விளக்கம் சனிக்கிழமை நடைபெற்றது.
அறுவடை செய்த நெல்லின் ஈரப்பதத்தை 21 சதவீதத்திலிருந்து 14 சதவீதமாக இந்த இயந்திரத்தின் மூலம் குறைக்க முடியும். 3 டன் நெல்லை 2 மணி நேரத்தில் உலரச் செய்து விடலாம். ஒரு டன்னிற்கு ரூ.2000 முதல் ரூ.2500 வரை செலவாகும். நெல்லில் ஈரப்பதத்தை குறைப்பதன் மூலம் அதிக நாட்கள் இருப்புவைக்க முடியும். நெல்லின் நிறமும் மாறாமல் பாதுகாக்கப்படும் என வேளாண் பொறியியல் துறையினா் தெரிவித்தனா்.
இந்த இயந்திரத்தின் பயன்பாடு குறித்த செயல்விளக்கத்தில் ஆட்சியா் இரா. லலிதா, வேளாண்மைத் துறை இணை இயக்குநா் ஜெ.சேகா் உள்ளிட்ட அலுவலா்கள் மற்றும் விவசாய சங்கப் பிரநிதிகள் பங்கேற்றனா்.