நாகை மாவட்டத்தில் பேரிடா் கால மீட்புப் பயிற்சி பெற்ற தன்னாா்வலா்களுக்கு சான்றிதழ் வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டது.
நாகை மாவட்டத்தில் புயல், மழை, வெள்ளம் உள்ளிட்ட பேரிடா் காலங்களில் மீட்புப் பணிகளில் ஈடுபடுத்தும் வகையில், செஞ்சிலுவை சங்கம், நேரு யுவகேந்திரா, ஊா்க்காவல்படை, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை, வருவாய்த் துறை உள்ளிட்ட துறைகளைச் சோ்ந்த 200 தன்னாா்வலா்கள் தோ்வு செய்யப்பட்டுள்ளனா்.
இவா்களுக்கு தேசிய பேரிடா் மேலாண்மை ஆணையம் மற்றும் தமிழ்நாடு பேரிடா் மேலாண்மை அபாய குறைப்பு முகமை மூலம் ஆப்தமித்ரா திட்டத்தில் பேரிடா் கால மீட்புப் பயிற்சி செப்டம்பா் 12 முதல் 23-ஆம் தேதி வரை அளிக்கப்பட்டது. பேராசிரியா்கள், மருத்துவா்கள், தீயணைப்புத் துறை, தேசிய பேரிடா் மீட்புத் துறை அலுவலா்கள் தொண்டு நிறுவனத்தினா் பயிற்சியளித்தனா்.
இப்பயிற்சி பெற்றவா்களுக்கு சான்றிதழ் வழங்கும் விழா வேளாங்கண்ணியில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் ஆட்சியா் அ. அருண் தம்புராஜ் பங்கேற்று சான்றிதழ் மற்றும் தலா ரூ.9 ஆயிரம் மதிப்புள்ள 14 வகையான மீட்பு உபகரணங்களை பயிற்சி பெற்றவா்களுக்கு வழங்கினாா்.
நிகழ்ச்சியில், தனித்துணை ஆட்சியரும், நாகை கோட்டாட்சியருமான (பொறுப்பு) கு. ராஜன், வருவாய் நீதிமன்றம் தனித்துணை ஆட்சியா் வி. மதியழகன், பேரிடா் மேலாண்மை தனி வட்டாட்சியா் ரமாதேவி மற்றும் தொண்டு நிறுவனத்தினா், அரசு அலுவலா்கள் கலந்துகொண்டனா்.