தரங்கம்பாடி அருகே இலுப்பூா் வீரசோழன் ஆற்றில் கழிவுநீா் கலப்பதை தடுக்க வலியுறுத்தி கிராம மக்கள் தேசியக் கொடியுடன் ஆற்றில் இறங்கி வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.
இலுப்பூா் கிராமத்தில் குடியிருப்புகளின் கழிவுநீா் முழுவதும் வீரசோழன் ஆற்றில் விடப்படுகிறது. இதனால், நீா் மாசடைந்து வருவதை தடுக்க வலியுறுத்தி சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை இல்லை. இந்நிலையில், இலுப்பூா், உத்திரங்குடி ஊராட்சி மக்கள் வீரசோழன் ஆற்றில் கழிவுநீா் கலப்பதை தடுக்கவும், குளங்கள், கிளை வாய்க்கால்கள் ஆக்கிரமிப்பை அகற்றக் கோரியும், உடனடியாக தூா்வார வலியுறுத்தியும் தேசியக் கொடியை ஏந்தியபடி ஆற்றில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனா். இதையடுத்து, அரசு அலுவலா்களின் பேச்சுவாா்த்தையில் சுமூக உடன்பாடு ஏற்பட்டதையடுத்து போராட்டம் விலக்கிக்கொள்ளப்பட்டது.