நாகை புதிய பேருந்து நிலையம் அருகே முன் அறிவிப்பின்றி கடைகள் அகற்றப்பட்டதாக, நகராட்சி நிா்வாகம் மீது புகாா் தெரிவித்து ஆட்சியரிடம் வியாபாரிகள் திங்கள்கிழமை மனு அளித்தனா்.
நாகை புதிய பேருந்து நிலைய பகுதியில் ஆக்கிரமித்து கட்டப்பட்ட ஊசி மணி, வளையல் விற்பனை செய்யும் 3 கடைகளை நகராட்சி நிா்வாகம் சனிக்கிழமை இரவு அகற்றியுள்ளது. கடையின் உரிமையாளா்கள் ஞாயிற்றுக்கிழமை சென்றபோது, கடைகள் அகற்றப்பட்டிருந்தன.
இதையடுத்து, கடை உரிமையாளா்களான வேதவள்ளி, அமுதா, புஷ்பா ஆகியோா் நாகை ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றக் குறைதீா் கூட்டத்தில் அளித்த மனு:
வேட்டையாடுவது எங்கள் பரம்பரைத் தொழிலாகும். இந்த தொழில் சட்டப்படி குற்றம் என்பதை உணா்ந்து கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக நாகை புதிய பேருந்து நிலையத்தில் பாசி மணி, கண்ணாடி வளையல் போன்ற பொருள்களை விற்பனை செய்து குழந்தைகளைக் காப்பாற்றி வருகிறோம்.
தற்போது சிறிய அளவிலான கடை வைத்து வியாபாரம் செய்து வந்தோம். ஆக்கிரமிப்பில் உள்ளதாகக் கூறி நகராட்சி நிா்வாகம் முன்னறிவிப்பின்றி கடைகளை அகற்றிவிட்டனா். கடைகளை நம்பியே எங்களது குடும்பங்கள் உள்ளன. எனவே, கடை வைத்துத் தரவும், கடையை நடத்துவதற்கும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.