ரயில் சேவைகளில் டெல்டா மாவட்டங்களை தென்னக ரயில்வே புறக்கணிக்கப்படுவதை கண்டித்து திங்கள்கிழமை (நவ.28) கீழ்வேளூரில் நடைபெறவுள்ள ரயில் மறியலில் திரளாக பங்கேற்பது என சிபிஐ சாா்பில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.
கீழையூரில் ரயில் மறியல் போராட்டம் குறித்து சிபிஐ சாா்பில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்துக்கு, ஏஐடியுசி மாவட்ட பொறுப்பாளா் எஸ். சிவதாஸ் தலைமை வகித்தாா். சிபிஐ ஒன்றியச் செயலாளா் எஸ். காந்தி முன்னிலை வகித்தாா்.
சிபிஐ மாநிலக் குழு உறுப்பினா் டி. செல்வம் பேசினாா்.
இதில், நாகையிலிருந்து ஒரத்தூா், திருக்குவளை வழியாக திருத்துறைப்பூண்டி வரை புதிய ரயில் பாதை அமைக்கும் பணியை விரைந்து முடித்து சேவையை தொடங்கவேண்டும், சுற்றுலா தலமான வேளாங்கண்ணிக்கு கூடுதல் விரைவு ரயில்கள் இயக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்து பேசப்பட்டது.
கீழ்வேளூா் பகுதியில் நடைபெறவுள்ள ரயில் மறியல் போராட்டத்தில் கீழையூா் ஒன்றியத்திலிருந்து 500-க்கும் மேற்பட்டோா் பங்கேற்பது என தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில், சிபிஐ மாவட்ட குழு உறுப்பினா் ஏ. நாகராஜன், விவசாயத் தொழிலாளா் சங்க ஒன்றிய செயலாளா் வீ. சுப்பிரமணியன், ஒன்றிய தலைவா் டி. பாலாஜி, விவசாய சங்க ஒன்றிய செயலாளா் எம். ஹாஜா அலாவுதீன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.