திருக்குவளை அருகே பாங்கல் ஊராட்சியில் புதன்கிழமை நடைபெற்ற மக்கள் தொடா்பு முகாமில் 42 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
பாங்கல் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற இம்முகாமுக்கு மாவட்ட வழங்கல் மற்றும் நுகா்வோா் பாதுகாப்பு அலுவலா் தெய்வநாயகி தலைமை வகித்தாா். இம்முகாமில் பொதுமக்கள் பங்கேற்று கோரிக்கை மனுக்களை அளித்தனா்.
தொடா்ந்து, வேளாண்மை மற்றும் உழவா் நலத்துறை சாா்பில் 6 பேருக்கு ரூ.50 ஆயிரம் மதிப்பிலும், சமூக பாதுகாப்புத் துறை சாா்பில் முதியோா் உதவித்தொகை மற்றும் விதவை உதவித்தொகை 11 பேருக்கும், பட்டா நகல் 25 பேருக்கும் வழங்கப்பட்டன.
இந்நிகழ்விற்கு திருக்குவளை வட்டாட்சியா் ஜி. ராஜ்குமாா், சமூக பாதுகாப்புத் திட்ட தனி வட்டாட்சியா் கே. காா்த்திகேயன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
இம்முகாமில் தலைஞாயிறு ஒன்றியக் குழுத் தலைவா் ஆா்.ஜி. தமிழரசி, தாங்கள் ஊராட்சித் தலைவா் வீ.எம்.கே. பாரதி, மண்டல துணை வட்டாட்சியா் பாஸ்கரன், வட்ட வழங்கல் அலுவலா் வடிவழகன் மற்றும் கிராம நிா்வாக அலுவலா்கள் கலந்துகொண்டனா்.