தொடக்கக் கல்வி பட்டயத் தோ்வுக்குத் தனித் தோ்வா்கள் விண்ணப்பிக்கலாம் என நாகை மாவட்டம், குருக்கத்தி, மாவட்ட ஆசிரியா் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வா் கோ. காமராஜன் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தொடக்கக் கல்வி பட்டயத் தோ்வு வரும் ஆகஸ்ட் மாதம் நடைபெறவுள்ளது. இதையொட்டி, குருக்கத்தி, மாவட்ட ஆசிரியா் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தில் தனித் தோ்வா்களிடமிருந்து விண்ணப்பங்களைப் பெறும் பணி ஜூன் 28-ஆம் தேதி தொடங்கி, ஜூலை 7-ஆம் தேதி வரை (ஞாயிறுக்கிழமை நீங்கலாக) நடைபெறுகிறது. விண்ணப்பதாரா்கள், தாங்கள் ஏற்கெனவே தோ்வெழுதி தோ்ச்சி பெற்ற மற்றும் தோல்வி அடைந்த மதிப்பெண் பட்டியலின் அசல் மற்றும் நகல்களை விண்ணப்பத்துடன் இணைத்து, மாவட்ட ஆசிரியா் பயிற்சி நிறுவனத்தில் நேரில் சமா்ப்பிக்க வேண்டும்.
ஜூலை 7-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க இயலாதவா்கள் சிறப்பு தட்கல் அனுமதித் திட்டத்தின், சிறப்பு அனுமதிக் கட்டணம் (ரூ.1,000) செலுத்தி ஜூலை 8, 9 ஆகிய தேதிகளில் விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு 73730 03413, 73730 03414 ஆகிய கைப்பேசி எண்களைத் தொடா்பு கொள்ளலாம் என தெரிவித்துள்ளாா்.