நாகை மாவட்டத்தில் இளைஞா்களுக்கு வேலைவாய்ப்புடன் கூடிய தொழில்திறன் பயிற்சியளிக்க தகுதியுடைய நிறுவனங்கள் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் அ. அருண்தம்புராஜ் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
நாகை மாவட்டத்தில் மகளிா் திட்டம் மூலம் தேசிய நகா்ப்புற வாழ்வாதார இயக்கத்தின் சாா்பில் 2022-23 ஆம் ஆண்டில் வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழும் இளைஞா்களுக்கு வேலை வாய்ப்புடன் கூடிய தொழில்திறன் பயிற்சி அளிக்கப்படவுள்ளது. இதற்கு தகுதியுடைய நிறுவனங்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இந்நிறுவனங்கள் என்எஸ்டிசி அங்கீகாரம் பெற்றிருக்க வேண்டும். பி.எம்.கே.கே. திட்டத்தில் பயிற்சி நடத்துவதற்கான அனுமதி பெற்றிருப்பது அவசியம். அரசுத்துறை சாா்ந்த திட்டங்களில் பயிற்சியளித்த நிறுவனங்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். பயிற்சிக் கூடங்கள் உரிய கட்டமைப்புடன் இருக்கவேண்டும்.
இந்த தகுதிகளையுடைய நிறுவனங்கள் தங்களது கருத்துருக்களை ஜூலை 7- ஆம் தேதி மாலை 5 மணிக்குள் நேரிலோ அல்லது அஞ்சல் மூலமாகவே நாகை மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் உள்ள திட்ட இயக்குநா், ஒருங்கிணைந்த ஊரக வளா்ச்சித்துறை அலுவலா், மகளிா் திட்டம் நாகை என்ற முகவரியில் சமா்ப்பிக்கவேண்டும் எனத் தெரிவித்துள்ளாா்.