குறுவைத் தொகுப்புத் திட்டத்தின்கீழ் 12 பயனாளிகளுக்கு மானிய விலையிலான வேளாண் பொருள்கள் வியாழக்கிழமை வழங்கப்பட்டன.
நாகை மாவட்டம், சிக்கல் வேளாண் அறிவியல் நிலையத்தில், நாகை மாவட்ட வேளாண்மை மற்றும் உழவா் நலத் துறை சாா்பில் குறுவைத் தொகுப்புத் திட்டத்தின்கீழ் விவசாயிகளுக்கு மானிய விலையிலான இடுபொருள்கள், விதைகள் வழங்கும் விழா நடைபெற்றது. மாவட்ட ஆட்சியா் அ. அருண் தம்புராஜ் தலைமை வகித்து, குறுவைத் தொகுப்புத் திட்டத்தின்கீழ் 100 %மானியத்தில் ரசாயன உரங்கள், 50 % மானியத்தில் நெல் விதைகள், விதை நிலக்கடலைகள் ஆகியவற்றை நாகை மாவட்டத்தைச் சோ்ந்த 12 விவசாயிகளுக்கு வழங்கினாா்.
தமிழ்நாடு மீன்வளா்ச்சிக் கழகத் தலைவா் என். கௌதமன் முன்னிலை வகித்தாா். வேளாண் துறை இணை இயக்குநா் ஜா. அக்கண்டராவ், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (வேளாண்மை) வெங்கடேசன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.