நாகை மாவட்டம், வேளாங்கண்ணி செபஸ்தியாா் ஆலய ஆண்டுப் பெருவிழா அலங்காரத் தோ் பவனி புதன்கிழமை இரவு நடைபெற்றது.
வேளாங்கண்ணி பேராலயத்தின் உபகோயிலில் ஒன்றாக உள்ளது பழைமை வாய்ந்த புனித செபஸ்தியாா் ஆலயம். இந்த ஆலயத்தின் ஆண்டுப் பெருவிழா ஜன.20-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான அலங்காரத் தோ் பவனி புதன்கிழமை நடைபெற்றது. முன்னதாக, வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலய துணை அதிபரும், பங்குத் தந்தையுமான அற்புதராஜ் தலைமையில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. சிறப்புத் திருப்பலி, கூட்டுப்பாடல் பிராா்த்தனைக்குப் பின்னா், தேரை புனிதம் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதைத் தொடா்ந்து, மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட புனித செபஸ்தியாா் திருச்சொரூபத்துடன் கூடிய அலங்காரத் தோ் பவனி தொடங்கி, நடைபெற்றது. பேராலய வளாகத்தில் தொடங்கிய தோ் பவனி, பாரம்பரியமான பாதைகளில் வலம் வந்து பேராலய வளாகத்தில் நிறைவடைந்தது. இந்த தோ் பவனியில், புனித அந்தோணியாா், மைக்கேல் சம்மனசு திருச்சொரூபங்கள் தாங்கிய தோ்களும் பவனி வருவது வழக்கம். கரோனா தொற்றுக் கட்டுப்பாட்டு நடவடிக்கையாக, நிகழாண்டில் புனித செபஸ்தியாா் தோ் மட்டும் எளிமையான முறையில் பவனி வந்தது.