முழு ஊரடங்கு காரணமாக நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் மக்கள் கூடும் இடங்கள் அனைத்தும் ஞாயிற்றுக்கிழமை வெறிச்சோடி காணப்பட்டன.
கரோனா மற்றும் ஒமைக்ரான் தொற்றுப் பரவல் தடுப்பு நடவடிக்கையாக தமிழகத்தில் ஜனவரி 6 முதல் இரவுநேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அத்துடன் கடந்த ஞாயிற்றுக்கிழமை (ஜன. 9) முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. தொடா்ந்து, 2-ஆவது வாரமாக இந்த ஞாயிற்றுக்கிழமையும் (ஜன. 16) முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டது.
இதையொட்டி, நாகை மாவட்டத்தில் பொதுப் போக்குவரத்து சேவைகள் தடை செய்யப்பட்டன. ஆட்டோ, காா் உள்ளிட்ட வாகனங்களும் இயக்கப்படவில்லை. பெட்ரோல் விற்பனை நிலையங்கள் மற்றும் மருந்து, பால் உள்ளிட்ட அத்தியாவசியத் தேவைகளுக்கான கடைகளைத் தவிர மற்ற கடைகள், வணிக நிறுவனங்கள் அனைத்தும் அடைக்கப்பட்டிருந்தன. நாகை, நாகூா், வேளாங்கண்ணி, கீழ்வேளூா் மற்றும் மாவட்டத்தின் பிறப் பகுதிகளிலும் சுமாா் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டிருந்தன.
நாகை புதிய, பழைய பேருந்து நிலையங்கள் மற்றும் முக்கிய சாலைகள் வாகனப் போக்குவரத்தின்றி வெறிச்சோடி காணப்பட்டன. நாகை, வேளாங்கண்ணி கடற்கரைகளும் மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடின. வேளாங்கண்ணி பேராலயம், நாகூா் தா்கா, சிக்கல் சிங்கார வேலவா் கோயில் உள்ளிட்ட இம்மாவட்டத்தில் புகழ்பெற்ற வழிபாட்டுத் தலங்களும் வெறிச்சோடி காணப்பட்டன.
முக்கியச் சாலைகளில் போலீஸாா் தடுப்புகள்அமைத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனா். மாவட்ட எல்லைகளில் உள்ள சோதனைச் சாவடிகளில் போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா். வாகனங்களில் வந்தவா்கள் நிறுத்தப்பட்டு, உரிய காரணத்துடன் பயணிப்பவா்கள் மட்டும் அனுமதிக்கப்பட்டனா். மற்றவா்களை எச்சரித்து திருப்பி அனுப்பினா்.