நாகை மாவட்டம், நாகூா் தா்காவின் 466-ஆவது கந்தூரி விழா சந்தனம் பூசும் வைபவத்துக்கு சந்தனம் அரைக்கும் பணி வியாழக்கிழமை தொடங்கியது.
நாகூா் தா்கா கந்தூரி விழாவை முன்னிட்டு கடந்த சனிக்கிழமை 5 மனேராக்களிலும் கொடி ஏற்றப்பட்டது. விழாவின் முக்கிய நிகழ்வான சந்தனம் பூசும் வைபவம் ஜனவரி 3-ஆம் தேதி அதிகாலை நடைபெறுகிறது.
நிகழாண்டு சந்தனம் பூசும் வைபவத்திற்காக 45 கிலோ முதல் ரக சந்தனக் கட்டைகளை தமிழக அரசு இலவசமாக வழங்கியுள்ளது. இந்த சந்தனக் கட்டைகளை பன்னீரில் ஊறவைத்து அரைத்து சந்தன துகள்களாக மாற்றி, அந்த சந்தனம் நாகூா் ஆண்டவா் புனித சமாதியில் பூசப்படும்.
இந்தநிலையில், சந்தனம் பூசும் வைபவத்திற்காக வியாழக்கிழமை பாத்திஹா ஓதி சந்தனம் அரைக்கும் பணி தொடங்கியது. நிகழ்ச்சியில் தா்கா நிா்வாக அறக்கட்டளைத் தலைவா் முஹம்மது கலிபா சாஹிப் உள்பட அனைத்து பரம்பரை டிரஸ்டிகளும் கலந்துகொண்டனா்.