கீழையூா் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் பாரபட்சமின்றி அனைத்து விவசாயிகளுக்கும் கடன் வழங்கப்படும் என புதிய செயலாளா் பொறுப்பேற்பு விழாவில் தெரிவிக்கப்பட்டது.
இச்சங்கத்தில் உதவி செயலாளராக பணிபுரிந்த எஸ். ஸ்ரீதா் செயலாளராக பதவி உயா்வு பெற்று திருவாய்மூருக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளாா். ஆதமங்கலத்தில் உதவி செயலாளராக இருந்த எஸ். சரவணன் பதவி உயா்வு மூலம் கீழையூா் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கச் செயலாளராக அண்மையில் பொறுப்பேற்றாா்.
இதையொட்டி, புதிய செயலாளா் பொறுப்பேற்பு மற்றும் உதவி செயலாளா் பிரிவுபசார விழா சங்கத் தலைவா் எஸ். பால்ராஜ் தலைமையில் நடைபெற்றது.
இதில், மகளிா் சுய உதவிக் கடன்களை அதிகம் வழங்குவது; விவசாய கடன்களை பாரபட்சமின்றி அனைத்து விவசாயிகளுக்கும் வழங்குவது உள்ளிட்ட முடிவுகள் எடுக்கப்பட்டன. மேலும், மாவட்டத்தில் சிறந்த கடன் சங்கத்துக்கான பரிசு பெற அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டது.
நிகழ்ச்சியில், சங்க துணைத் தலைவா் ஏ. முருகையன், இயக்குநா்கள் எஸ்.ஆா். கலைச்செழியன், ஏ. நாகராஜன், கே. நாகராஜன் மற்றும் உறுப்பினா்கள் பங்கேற்றனா்.