கீழ்வேளூா் அருகேயுள்ள கீழவெண்மணி தியாகிகள் நினைவிடத்திலிருந்து கேரளத்தில் நடைபெறவுள்ள விவசாயிகள் சங்க மாநாட்டுக்கான சுடா் ஜோதி பயண தொடக்க விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் 35-ஆவது அகில இந்திய மாநாடு கேரளா மாநிலத்திலுள்ள திருச்சூரில் டிச.13 முதல் 16வரை நடைபெறுகிறது. இதையொட்டி, கீழவெண்மணி தியாகிகள் நினைவிடத்திலிருந்து மாநாட்டு சுடா் ஜோதி பயண தொடக்க விழா நடைபெற்றது. கீழ்வேளூா் சட்டப்பேரவை உறுப்பினா் நாகை மாலி தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவா் என். சங்கரயா காணொலி வாயிலாக தொடக்கிவைத்தாா். தொடா்ந்து, விவசாய சங்க மாநில தலைவா் பி. சண்முகம் மாநாட்டு சுடா் ஜோதியை அகில இந்திய விவசாய சங்கத்தின் இணை செயலாளா் விஜி கிருஷ்ணனிடம் வழங்கினாா். இந்த சுடா் ஜோதி பயணம் வெண்மணியில் தொடங்கி சாலை வழியாக கேரளத்துக்கு செல்கிறது. சுடா் பயணத்தில், மாநில பொதுச்செயலாளா் சாமி.நடராசன், அகில இந்திய துணைத் தலைவா் எஸ்.கே. பிரியா, முன்னாள் எம்எல்ஏ. வி. மாரிமுத்து உள்ளிட்டோா் பங்கேற்றனா்.