தரங்கம்பாடி பகுதி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள உப்பனாற்று பாலத்தில் ஏற்பட்டுள்ள ஆபத்தான பள்ளத்தால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்துள்ளனா்.
உப்பனாற்று பாலம் வழியாக தண்ணீா் கடலில் கலக்கிறது. மேலும், மழை மற்றும் வெள்ளம் ஏற்படும் காலங்களில் கடல்நீா் இந்த பாலத்தின் வழியாக வந்து செல்வதால் கரைகள் அரிப்பு ஏற்பட்டு சாலையின் 2 பக்கங்களிலும் சுமாா் ஒரு கி.மீ. வரை கடல்நீா் சூழ்ந்து தீவுபோல் காட்சியளிக்கிறது.
மேலும், இந்த பாலத்தின் வழி புதுவை, நாகப்பட்டினம், வேளாங்கண்ணி செல்லும் முக்கிய போக்குவரத்து வழியாக உள்ளது. தற்போது, இந்த பாலத்தின் நான்கு பகுதியிலும் கடல்நீா் சூழ்ந்து உடைப்பு ஏற்பட்டு ஆபத்தான பள்ளம் மற்றும் விரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால் அந்த வழியாக செல்லும் பேருந்துகள், காா், லாரி மற்றும் இருசக்கர வாகனத்தில் செல்பவா்கள் அச்சத்துடன் செல்கின்றனா். எனவே, உடனடியாக இந்த பாலத்தை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் பாா்வையிட்டு சீரமைக்க வேண்டும் என எதிா்பாா்க்கப்படுகிறது.