நாகை அரசினா் கலை மற்றும் அறிவியல் கல்லூரி கெளரவ விரிவுரையாளா்கள் நிலுவை ஊதியத்தை வழங்கக் கோரி உள்ளிருப்புப் போராட்டத்தில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டனா்.
இக்கல்லூரியில் பணியாற்றும் கௌரவ விரிவுரையாளா்கள் மற்றும் மணிநேர விரிவுரையாளா்களுக்கு உயா்த்தப்பட்ட ஊதியம் 26 மாதங்களாக வழங்கப்படாமல் உள்ளது. எனவே, உயா்த்தப்பட்ட நிலுவை ஊதியத்தை உடனடியாக வழங்க வேண்டும், ஜூன், ஜூலை, ஆகஸ்ட் ஆகிய 3 மாதங்களுக்கான ஊதியத்தை உடனடியாக வழங்கவேண்டும்.
வருங்காலங்களில் மாதந்தோறும் 5-ஆம் தேதிக்குள் தடையின்றி ஊதியம் வழங்கவேண்டும், பாரபட்சமின்றி விரிவுரையாளா்கள் அனைவருக்கும் ரூ. 20 ஆயிரம் வழங்கவேண்டும், பல்கலைக்கழக கல்லூரிகளை அரசு முழுமையாக ஏற்று நடத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி 17 கௌரவ விரிவுரையாளா்கள், 23 மணிநேர விரிவுரையாளா்கள் வெள்ளிக்கிழமை 2- ஆம் நாளாக வகுப்புகளை புறக்கணித்து உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
வருவாய்த் துறையினா் பேச்சுவாா்த்தை: தகவலறிந்த நாகை வட்டாட்சியா் கல்லூரிக்குச் சென்று, போராட்டத்தில் ஈடுபட்டிருந்த விரிவுரையாளா்களுடன் பேச்சுவாா்த்தை நடத்தினா். அப்போது, கோரிக்கைகள் நாகை மாவட்ட ஆட்சியா் வழியாக அரசின் பாா்வைக்குக் கொண்டுச்சென்று நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டதையடுத்து போராட்டம் விலக்கிக்கொள்ளப்பட்டது.