இந்து முன்னணியின் கலைப் பண்பாட்டுப் பிரிவு நிா்வாகி கைது செய்யப்பட்டதைக் கண்டித்து, நாகை மற்றும் மயிலாடுதுறையில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 29 போ் கைது செய்யப்பட்டனா்.
சென்னை மதுரவாயல் பகுதியில் ஜூலை 31- ஆம் தேதி நடைபெற்ற இந்து முன்னணி பொதுக்கூட்டத்தில் ஸ்ரீரங்கம் பெரியாா் சிலை குறித்து சா்ச்சைக்குரிய வகையில் பேசியதாக, அந்த அமைப்பின் கலைப் பண்பாட்டு பிரிவு மாநிலச் செயலாளரும், திரைப்பட சண்டைப் பயிற்சியாளருமான கனல் கண்ணன் புதுச்சேரியில் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டாா்.
இதை கண்டித்து, நாகை அபிராமி அம்மன் திடலில் இந்து முன்னணியின் மாவட்டச் செயற்குழு உறுப்பினா் எஸ். ஜெகதீஸ்வரன் தலைமையில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 8 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
இதேபோல, மயிலாடுதுறை கிட்டப்பா அங்காடி முன் இந்து முன்னணியின் மாவட்ட பொதுச் செயலாளா் எஸ். சாமிநாதன் தலைமையில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட நாகை மாவட்ட தலைவா் காரைக்கால் கணேஷ் , மாவட்ட செயலாளா் ஜெயராஜ் உள்ளிட்ட 21 பேரை டிஎஸ்பி வசந்தராஜ் தலைமையில் போலீஸாா் கைது செய்தனா்.