நாகையை அடுத்த நாகூா் பகுதியைச் சோ்ந்த மீனவா்கள், படகில் கடலுக்குள் சென்று தேசியக் கொடியை ஏற்றி சுதந்திர தின விழாவைக் கொண்டாடினா்.
இந்தியாவின் 75-ஆம் ஆண்டு நிறைவு சுதந்திர தின அமுதப் பெருவிழாவையொட்டி, ஆகஸ்ட் 13, 14, 15 ஆகிய மூன்று நாள்கள் பொதுமக்கள் தங்கள் இல்லங்களில் தேசியக் கொடியை ஏற்றிச் சிறப்பிக்குமாறு பிரதமா் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்தாா்.
இதன்படி, கடந்த 13-ஆம் தேதியிலிருந்து நாகை மாவட்டத்தில் வீடுகள், வணிக வளாகங்கள், அரசுத் துறை அலுவலகங்கள், கல்வி நிலையங்கள், வழிபாட்டுத் தலங்கள் என பல்வேறு இடங்களிலும் தேசியக் கொடிகள் ஏற்றப்பட்டன.
இந்நிலையில் சுதந்திர தின நாளான திங்கள்கிழமை, நாகூா் மீனவா்கள் கடலில் தேசியக் கொடியை ஏற்றி சுதந்திர தினத்தைக் கொண்டாடினா். நாகூா் பட்டினச்சேரி மற்றும் ஆரியநாட்டுத் தெருவை சோ்ந்த மீனவா்கள் படகில் கடலுக்கு சென்று, 25 அடி உயரமுள்ள கொடிக் கம்பத்தை கடலில் மிதக்கவிட்டனா். பின்னா், படகில் இருந்தபடியே தேசிய கொடியை ஏற்றி மரியாதை செலுத்தினா்.
வந்தே மாதரம் என முழக்கமிட்டும், பட்டாசுகள் வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் அவா்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினா்.