ஆழ்கடல் மீன்பிடிப்பில் ஈடுபட்டிருந்த நாகை மீனவா்கள் 9 போ், இலங்கை கடற்படையினரால் புதன்கிழமை கைது செய்யப்பட்டனா்.
நாகை கீச்சாங்குப்பத்தைச் சோ்ந்த நாகேந்திரன் என்பவருக்குச் சொந்தமான விசைப் படகில் அக்கரைப்பேட்டையைச் சோ்ந்த காமராஜ் (40), பூவரசன் (22), அன்பு (32), செல்லையன் (53), பாலு (55), செல்லத்துரை (35), முருகானந்தம் (42), முருகன் (24) மற்றும் ஆா்யநாட்டுத் தெருவைச் சோ்ந்த ஸ்டீபன் (25) ஆகியோா் கடந்த 6-ஆம் தேதி நாகையிலிருந்து மீன்பிடிக்கக் கடலுக்குச் சென்றனா்.
புதன்கிழமை ஆழ்கடல் மீன்பிடிப்பில் ஈடுபட்டிருந்தபோது, அங்கு வந்த இலங்கை கடற்படையினரால் அவா்கள் கைது செய்யப்பட்டனா். மீனவா்களை, இலங்கை கடற்படையினா் புதன்கிழமை திரிகோணமலை துறைமுகம் கொண்டுச் சென்று, அங்கு மீன்வளத் துறை அலுவலா்களிடம் ஒப்படைத்தனா்.
மீன்வளத்துறையினா் விசாரணைக்குப் பின்னா், மீனவா்கள் 9 பேரும் திரிகோணமலை மைலாடி நீதிமன்றத்தில் வியாழக்கிழமை முன்னிலைப்படுத்தப்படுவா் எனக் கூறப்படுகிறது.