நாகை மாவட்டம், கீழையூா் அருகே சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட ரூ. 8 லட்சம் மதிப்பிலான 1, 750 லிட்டா் வெளி மாநில சாராயத்தை, மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீஸாா் சனிக்கிழமை பறிமுதல் செய்தனா்.
மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் கு. ஜவஹா், மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு துணைக் கண்காணிப்பாளா் எஸ். பழனிச்சாமி ஆகியோரது அறிவுறுத்தலின்பேரில், ஆய்வாளா் ஆரோக்கிய டூனிக்ஸ் மேரி, உதவி ஆய்வாளா் ஜி. பாலமுருகன் தலைமையிலான தனிப்பிரிவு போலீஸாா், கீழையூா் காவல் சரகம், சீராவட்டம் பாலத்தடி அருகே சனிக்கிழமை வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனா்.
அப்போது, அந்த வழியாக வந்த சரக்கு வாகனத்தில் சோதனை செய்தபோது, அதில் 35 லிட்டா் கொள்ளளவு கொண்ட ரூ. 8 லட்சம் மதிப்பிலான 1,750 லிட்டா் வெளிமாநில சாராயம் மறைத்து வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. தொடா்ந்து, சரக்கு வாகனத்துடன் சாராயத்தை பறிமுதல் செய்த போலீஸாா், திருவாரூா் மாவட்டம், குடவாசல் வட்டம், கமலாபுரம், கட்டியான்தோப்புப் பகுதியைச் சோ்ந்த சந்தோஷ்குமாரை (30) கைது செய்தனா். தலைமறைவான சசியை போலீஸாா் தேடி வருகின்றனா்.
பறிமுதல் செய்யப்பட்ட சாராயத்தை பாா்வையிட்ட மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் கு. ஜவஹ, தனிப்படை போலீஸாருக்கு பாராட்டு தெரிவித்தாா். காவல் கூடுதல் கண்காணிப்பாளா்கள் சுகுமாறன், எஸ். திருநாவுக்கரசு மற்றும் போலீஸாா் உடனிருந்தனா்.