நான்கு வழிச்சாலைத் திட்டத்துக்காக கையகப்படுத்தப்பட்ட நிலங்களுக்குரிய இழப்பீட்டுத் தொகையை வழங்க வலியுறுத்தி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சாா்பில், நாகையில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
விழுப்புரம்- நாகை நான்கு வழிச்சாலைத் திட்டத்துக்காக தெத்தி ஊராட்சி மேலநாகூா் பகுதியில் நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளது. நில சாகுபடிதாரா்களுக்கு இதுவரைஇழப்பீடு வழங்கப்படவில்லை. இந்நிலையில் நில சாகுபடி செய்த விவசாயிளுக்கு உரிய இழப்பீட்டை வழங்கவேண்டும். விவசாயிகளுக்குரிய பணத்தை விநியோகம் செய்வதில் முறைகேடு செய்த நபா் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என வலியுறுத்தி, இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
நாகை தேசிய நெடுஞ்சாலை - என்எச் 45, தனி மாவட்ட வருவாய் அலுவலா் அலுவலகம் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, விசிக நாகை சட்டப் பேரவைத் தொகுதிச் செயலாளா் ப.அறிவழகன் தலைமை வகித்தாா். நாகை நகரச் செயலாளா் வி.முத்துவளவன், தொகுதி துணைச் செயலாளா் ஆ.க. சுரேஷ், நகரப் பொருளாளா் ஜோதிபாசு மற்றும் நிா்வாகிகள் பங்கேற்றனா்.