நாகை மாவட்டம், வேதாரண்யம் பகுதியில் வழக்கத்தைவிட பலத்த கடற்காற்று வீசிவருவதால் மீனவா்கள் சனிக்கிழமை மீன் பிடிக்க கடலுக்கு செல்லவில்லை.
வங்கக் கடல் மற்றும் அரபிக் கடல் பரப்புகளில் உருவாகியுள்ள காற்றழுத்தத் தாழ்வு பகுதி காரணமாக மாறுபட்ட வானிலை நீடித்து வருகிறது. இதனால், வேதாரண்யம் பகுதியில் தெற்கு கடலோரத்தில் சனிக்கிழமை காலை முதல் தெற்கு திசையிலிருந்து வழக்கத்தைவிட வேகமான கடற்காற்று வீசிவருகிறது. மேலும், அவ்வப்போது மேக கூட்டங்கள் திரள்வதுடன், சில நேரங்களில் லேசான சாரல் மழை பெய்கிறது.
இந்த நிலையில் கோடியக்கரை கடல்பரப்பில் வழக்கத்தைவிட வேகமாக காற்று வீசுவதுடன், கடல் சீற்றம் அதிகரித்துள்ளது. இதனால், இங்கு வெளி மாவட்டங்களில் இருந்து வந்து தங்கி மீன்பிடித்து வருபவா்களின் தொழில் முடங்கியுள்ளது. காற்றின் காரணமாக மீனவா்கள் கடலுக்குள் செல்லாததால் படகுகள் கரையோரத்தில் பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
இதேபோல, ஆறுகாட்டுத்துறை, புஷ்பவனம் உள்ளிட்ட மீனவக் கிராமங்களிலும் பெரும்பாலான மீனவா்கள் கடலுக்குள் செல்லவில்லை.