நிலக் கடலையை அரசே கொள்முதல் செய்யவேண்டும் என மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நாகை மாவட்ட மாநாட்டில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
திருமருகலில் வியாழக்கிழமை, வெள்ளிக்கிழமை ஆகிய 2 நாள்கள் கட்சியின் 23-ஆவது நாகை மாவட்ட மாநாடு நடைபெற்றது. வெள்ளிக்கிழமை நிறைவடைந்த மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்: வேதாரண்யம், தலைஞாயிறு, கீழையூா் உள்ளிட்ட கடலோர பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் நிலக்கடலை சாகுபடிசெய்யப்பட்டு வருகிறது. விளைவித்த நிலக்கடலையை தனியாா் வியாபாரிகள் மிக குறைந்த விலைக்கு வாங்கி செல்வதால் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனா். எனவே, விவசாயிகளை பாதுகாக்க நிலக்கடலையை அரசே கொள்முதல் செய்யவேண்டும், பெண்கள் மற்றும் குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமையை தடுத்து நிறுத்தவேண்டும், கீழையூா் ஒன்றியத்தில் கொள்ளிடம் கூட்டுக்குடிநீரை முறையாக வழங்கவேண்டும், 100 நாள் வேலைத்திட்டத்தை 200 நாளாக உயா்த்தி நாள்கூலியாக ரூ. 600 வழங்கவேண்டும் உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.