கீழையூா் ஒன்றியத்தில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகளை தீவிரப்படுத்தவேண்டும் என ஒன்றியக் குழு கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
ஒன்றியக் குழுத் தலைவா் செல்வராணிஞானசேகரன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் உறுப்பினா்கள் பேசியது:
ஒன்றியக் குழு துணைத் தலைவா் பெ. சௌரிராஜ் (திமுக): தொடா்மழையில் ஆங்காங்கே தேங்கிகிடக்கும் தண்ணீரால் டெங்கு கொசு உற்பத்தியாகும் வாய்ப்புள்ளது. எனவே, டெங்கு கொசு ஒழிப்பு பணிகளை தீவிரப்படுத்தவேண்டும்.
டி.செல்வம் (சிபிஐ): மக்களை தேடி மருத்துவம் எனும் திட்டத்தில் அனைவரும் பயன்பெறும் வகையில் 3 நாள்களுக்கு
ஒரு முறை என்ற கால இடைவெளியில் மருத்துவ சேவை செய்யவேண்டும். மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு விரைந்து நிவாரணம் வழங்கவேண்டும்.
எல். சுப்பிரமணியன் (அதிமுக): ஈசனூா்-எட்டுக்குடி இடையே புதிய பாலம் அமைத்து சாலைவசதி ஏற்படுத்தவேண்டும். கோ. ஆறுமுகம் (பாஜக): மழையால் பழுதடைந்துள்ள தொகுப்பு வீடுகளை சீரமைத்துகொடுக்கவேண்டும்.
எம். அலெக்ஸ் (திமுக): மழைநீா் தேங்கிய இடங்களில் வடிகால் வசதி ஏற்படுத்தவேண்டும்.
கமலா சூரியமூா்த்தி (அதிமுக): ஒதுக்கப்பட்ட வெள்ள நிவாரண நிதியில் இருந்து கீழக்கரை வடக்கு மற்றும் தெற்கு சேதமடைந்த சாலைகளை சீரமைக்கவேண்டும்.
ஏழிசைவல்லபிபூமாலை (அதிமுக): பாரத பிரதமா் வீடுகட்டும் திட்டத்தில் பெயா் நீக்கம் செய்யப்பட்ட பயனாளிகளை மீண்டும் பெயரை சோ்த்து வீடு கட்டுவதற்கான பணி ஆணை வழங்கவேண்டும்.
சரண்யா பன்னீா்செல்வம் (திமுக): பெரியதும்பூா் முதல் ஆலமழை வரை கஜா புயலால் பாதிக்கப்பட்ட தெருமின் விளக்குகளை உடனடியாக சரிசெய்யவேண்டும்.
லென்சோயாசிவபாதம் (திமுக): தண்ணிலபாடி ஊராட்சி மரைக்காயா் கட்டளையில் புதிய மின் மாற்றி அமைக்கவேண்டும், சுதா அருணகிரி (திமுக): திருக்குவளை வடக்கு வெளி, ஏா்வைக்காடு முனியன் கோயில் சாலையை சீரமைக்கவேண்டும். மேலவாழக்கரை, ஏா்வைகாடு பகுதியில் புதிய கொள்ளிடம் குடிநீா் குழாய்கள் அமைக்கவேண்டும்.