சேந்தங்குடியில் குளத்தில் தவறி விழுந்து சிறுவன் பலியான துக்கம் தாங்காமல் சிறுவனின் தந்தை தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மயிலாடுதுறை மாவட்டம், மயிலாடுதுறை அருகே சேந்தங்குடியைச் சேர்ந்வர் வினோத் (வயது 40). வீடியோ தொழில் செய்து வந்தார். இவருக்கு சாரதா என்ற மனைவியும், சாலமன், சாம்சன்(10), மகள் ஷாலினி ஆகிய 3 குழந்தைகளும் உள்ளனர். நேற்று வினோத் வீட்டில் இருந்த நேரத்தில் வினோத்தின் இரண்டாவது மகன் சாம்சன் நாகங்குடி கிராமத்தில் உள்ள தண்ணீர்பாய்ந்தான் குளத்திற்கு தனது நண்பர்களுடன் விளையாடச் சென்றுள்ளார்.
அப்போது, பொழுது சாய்ந்ததால் அப்பகுதியினரை சிறுவர்களை வீட்டுக்குச் செல்லச்சொல்லி விரட்டியுள்ளனர். சாம்சனின் சக நண்பர்கள் ஓடிவிட சாம்சன் மட்டும் குளக்கரையில் பதுங்கி இருந்துள்ளார். சிறிதுநேரம் கழித்து அங்கிருந்து புறப்பட்ட சாம்சன் குளத்தில் தவறி விழுந்துள்ளார். இரவு 7 மணியைக் கடந்தும் மகனைக் காணாததால் விசாரித்துப் பார்த்ததில் சாம்சன் குளத்திற்கு சென்றது தெரியவந்ததைத் தொடர்ந்து அங்கு சென்று தேடியுள்ளனர்.
ஆனால் சிறுவன் கிடைக்காததால் சந்தேகத்தின்பேரில் மயிலாடுதுறை தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தந்துள்ளார். தீயணைப்பு நிலைய அலுவலர் முத்துக்குமார் தலைமையிலான வீரர்கள் குளத்தில் இறங்கி தேடியதில் ஒருமணி நேரத்துக்குப் பின் சிறுவன் சாம்சன் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டார். அவரது உடலை போலீஸார் மயிலாடுதுறை அரசினர் மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
சிறுவன் உயிரிழந்த துக்கம் தாங்காத அவரது தந்தை வினோத் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் உள்ளே சென்று தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து, வினோத்தின் உடலையும் மயிலாடுதுiறை அரசினர் மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து மயிலாடுதுறை போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஒரே வீட்டில தந்தை, மகன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியினரிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.