நாகை மாவட்டம், வேதாரண்யம் அருகே பாட்டியை அடித்து கொலை செய்த பேரனை காவல்துறையினர் புதன்கிழமை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
நாகை மாவட்டம்,வேதாரண்யம் அருகே நாகக்குடையான் கிராமம், நடு சாலை பகுதியை சேர்ந்தவர்கள் செல்வராசு (80), காந்திமதி (75) தம்பதியர். இவர்களது மகளான ராணி, அதே பகுதியில் தனது கணவர் காளிமுத்துவுடன் வசித்து வருகிறார்.
ராணி - காளிமுத்து மகனான ரஞ்சித் (23), தனது தாய் ராணிக்கு சொத்து கேட்டு தாத்தா செல்வராசுவிடம் அடிக்கடி தகராறு செய்ததாகத் தெரிகிறது.
இந்த நிலையில், புதன்கிழமை இரவு செல்வராசு வீட்டுக்கு சென்ற ரஞ்சித், சொத்துக் கேட்டு அவரிடம் தகராறு செய்து கையால் தாக்க முற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதையறிந்த, காந்திமதி இருவருக்குமிடையேயான மோதலை விலக்கிவிட்டதாகக் கூறப்படுகிறது.
அப்போது, ரஞ்சித் கையால் அடித்துத் தள்ளியதில் கீழே விழுந்த காந்திமதி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். தகவல் அறிந்து சென்ற காவல்துறையினர் சடலத்தை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக ரஞ்சித்தை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.