நாகை மாவட்டம், நாகூரில் இருந்து அஜ்மீருக்கு புதிய விரைவு ரயில் இயக்க வேண்டும் என நாகூா், நாகப்பட்டினம் ரயில் உபயோகிப்பாளா் நலச் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து அந்த அமைப்பின் தலைவா் எஸ். மோகன், செயலா் நாகூா் சித்திக், பொருளாளா் பி. பாலகிருஷ்ணன் ஆகியோா் மத்திய ரயில்வே அமைச்சா் அஸ்வின் வைஷ்ணவுக்கு அனுப்பிய கோரிக்கை மனு:
வேளாங்கண்ணியிலிருந்து தினமும் அதிகாலை நேரத்தில் திண்டுக்கல் வழியாக மதுரைக்கு விரைவு ரயில் இயக்க வேண்டும்; வாரம் இரு முறை இயக்க அனுமதிக்கப்பட்டு, சேவை தொடங்கப்படாமல் உள்ள வேளாங்கண்ணி - எா்ணாகுளம் விரைவு ரயிலை பட்டுக்கோட்டை, விருதுநகா், கொல்லம் வழியாக உடனடியாக இயக்க வேண்டும்; கரோனா பரவல் காரணமாக சேவை நிறுத்தப்பட்டுள்ள காரைக்கால் - பெங்களூரு பயணிகள் ரயிலை விரைவு ரயிலாக இயக்கவும், திருச்சி பயணிகள் ரயில் சேவையை மீண்டும் தொடங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்; காரைக்கால் - திருநள்ளாறு- பேரளம் தடத்தில் அகலப்பாதை அமைக்க வேண்டும்.
நாகை - திருக்குவளை- திருத்துறைப்பூண்டி அகல ரயில் பாதை பணிகளை விரைந்து நிறைவேற்ற வேண்டும்; நாகூா் - அஜ்மீருக்கு விரைவு ரயில் இயக்க வேண்டும் என அந்தக் கோரிக்கை மனுவில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.