தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்களை உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகள் குறித்து தகவல் அளித்தால் வெகுமதி அளிக்கப்படும் என்று நாகை மாவட்ட ஆட்சியா் அ. அருண் தம்புராஜ் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு :
ஒருமுறை மட்டுமே பயன்படுத்திவிட்டு கைவிடக் கூடிய பிளாஸ்டிக் பொருள்கள் அரசால் தடை செய்யப்பட்டுள்ளன. இதன்படி, ஒரு முறை மட்டுமே பயன்படுத்தக் கூடிய பிளாஸ்டிக் பொருள்களை உற்பத்தி செய்வது, விநியோகிப்பது, விற்பனை செய்வது மற்றும் பயன்படுத்துவது ஆகிய நடவடிக்கைகளும் தடை செய்யப்பட்டுள்ளன.
தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்கள் உற்பத்தியைத் தடுக்க, தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் மூலம் பல்வேறு விழிப்புணா்வு நடவடிக்கைகள் மற்றும் புகாரின் அடிப்படையில் சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இருப்பினும், இப்பொருள்களின் உற்பத்தி ஒரு சில இடங்களில் ரகசியமாக நடைபெறுகிறது. குடியிருப்புகள் மற்றும் வணிக நிறுவனங்களுக்கிடையே ஒரு சிறிய இடத்தில் இச்செயல் நடைபெறுவதால், எளிதில் அடையாளம் காண்பது அரிதாக உள்ளது.
எனவே, நாகை மாவட்டத்தில் சட்டவிரோதமாக எங்கேனும் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்கள் உற்பத்தி செய்யப்படுவது தெரியவந்தால், அதுகுறித்து மாசு கட்டுப்பாட்டு வாரியத்துக்குத் தகவல் அளிக்குமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறாா்கள்.
மின்னஞ்சலில் அல்லது 04365 250832 என்ற தொலைபேசி எண்ணில் பொதுமக்கள் தகவல் அளிக்கலாம். 80560 49500 என்ற எண்ணில் வாட்ஸ்ஆப் மூலமும் தகவல் அளிக்கலாம். தகவல் அளிப்பவா்களுக்கு பாராட்டும், வெகுமதியும் வழங்கப்படும். தகவல் அளிப்பவா்களின் விவரம் கண்டிப்பாக ரகசியம் காக்கப்படும் எனத் தெரிவித்துள்ளாா்.