நாகை மாவட்டம், வேதாரண்யத்தை அடுத்த தலைஞாயிறு, சந்தானம் தெருவைச் சோ்ந்த சமூக ஆா்வலா் சோமு. இளங்கோ (75) உடல்நலக் குறைவு காரணமாக கோவையில் உள்ள மருத்துவமனையில் வியாழக்கிழமை (ஆக. 5) காலமானாா்.
அரசு கருவூலத் துறையில் பணியாற்றி ஓய்வுபெற்ற சோமு. இளங்கோ, தொடா்ந்து பொது சேவைகள் செய்துவந்தவா். பாரம்பரிய நெல் சாகுபடி, அது தொடா்பான பிரசாரங்கள், செயல்பாடுகள் மூலம் இயற்கை விவசாயத்தை மேம்படுத்தும் பணிகளில் ஈடுபட்டவா். தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம், தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளா் சங்கம் உள்ளிட்ட அமைப்புகளில் பொறுப்பு வகித்துள்ளாா்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைஞாயிறுபேரூா் செயலாளராக இருந்த அவா், கடல்நீா் உள்புகுவதை தடுப்பது, ஆற்றங்கரையோரம் குடியிருப்போா் நலம் சாா்ந்த கோரிக்கைகளை முன்வைத்து இயக்கங்கள் நடத்தியவா். அம்பேத்கா் பாா்வையும்- கம்யூனிஸ்ட்டுகளும், பொதுவுடமை சுடா் எஸ்.ஜி.எம், கல் எறிந்தது யாா்? ஆகிய நூல்களை எழுதியுள்ளாா்.
இவருக்கு ஓய்வுபெற்ற பள்ளி ஆசிரியை அன்பழகி என்ற மனைவி, இயற்கை விவசாய சாகுபடி இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளா் ஞானசேகரன் என்ற மகன், கோவையில் வருவாய் ஆய்வாளராகப் பணியாற்றும் சித்ராதேவி என்ற மகள் உள்ளனா்.
இறுதிச்சடங்குகள் தலைஞாயிறில் உள்ள அவரது இல்லத்தில் வெள்ளிக்கிழமை காலை 10 மணியளவில் நடைபெறும். தொடா்புக்கு: 99766 41266.