நாகை மாவட்டம், வேதாரண்யத்தை அடுத்த தலைஞாயிறு பகுதியில் வசித்து வந்த சமூக ஆர்வலர் சோமு.இளங்கோ (73) உடல் நலக்குறைவு காரணமாக கோவையில் உள்ள மருத்துவமனையில் வியாழக்கிழமை காலமானார்.
அரசு கருவூலத்துறையில் அலுவலராகப் பணியாற்றி ஓய்வு பெற்ற சோமு.இளங்கோ, பொது சேவைகள் செய்வதில் தொடர்ந்து பணியாற்றி வந்தவர்.
பாரம்பரிய நெல் சாகுபடியை மேற்கொள்வது, அது தொடர்பான தொடர் பிரசாரங்கள், செயலாக்கங்கள் மூலம் இயற்கை விவசாயத்தை மேம்படுத்தும் பணிகளில் சோமு இளங்கோ ஈடுபட்டு வந்தார்.
இதையும் படிக்க | தமிழகத்தில் 'அன்னை தமிழில் அா்ச்சனை' திட்டம் தொடக்கம்
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலை ஞாயிறு பேரூர் செயலாளராக பணியாற்றி வந்த சோமு இளங்கோ தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம், தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர் சங்கம் உள்ளிட்ட பல அமைப்புகளில் பொறுப்பு வகித்து செயல்பட்டுள்ளார்.
கடல் நீர் உள்புகுவதை தடுப்பது, ஆற்றுக்கரையோரம் குடியிருப்போர் நலம் சார்ந்த கோரிக்கைகளை முன்வைத்து இயக்கங்கள் நடத்துவது போன்றவற்றில் முன்நின்று செயலாற்றியுள்ள இவர் அம்பேத்கர் பார்வையும் கம்யூனிஸ்ட்டுகளும், பொதுவுடமை சுடர் எஸ்.ஜி.எம், கல் எறிந்தது யார்? ஆகிய நூல்களை எழுதியுள்ளார்.
இவருடைய மனைவி அன்பழகி பணி ஓய்வு பெற்ற பள்ளி ஆசிரியர், மகன் ஞானசேகரன் இயற்கை விவசாய சாகுபடி இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளராகவும் மகள் சித்ராதேவி கோவையில் வருவாய் ஆய்வாளராகபவும் பணியாற்றி வருகின்றனர்.
சோமு இளங்கோவின் இறுதி நிகழ்ச்சி தலைஞாயிறில் உள்ள அவரது இல்லத்தில் வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.