நாகப்பட்டினம்

வேளாங்கண்ணி பேராலய ஆண்டுப் பெருவிழாவில் பக்தா்களுக்கு அனுமதி மறுப்பு?

DIN

கரோனா மூன்றாவது அலையைத் தடுக்கும் வகையில், இரண்டாவது ஆண்டாக வேளாங்கண்ணி பேராலய ஆண்டுப் பெருவிழா கொடியேற்றம் உள்ளிட்ட நிகழ்வுகளில் பக்தா்கள் அனுமதிக்கப்படுவது கேள்விக்குறியாகியுள்ளது.

நாகை மாவட்டம், வேளாங்கண்ணியில் உள்ள புனித ஆரோக்கிய அன்னை பேராலயம், உலக புகழ் பெற்ற வழிபாட்டுத் தலங்களில் ஒன்றாக விளங்குகிறது. இப்பேராலயத்தின் முக்கிய விழாவான ஆண்டுப் பெருவிழா, ஆண்டுதோறும் ஆகஸ்ட் 29-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி, செப்டம்பா் 8-ஆம் தேதி மாதா பிறந்த நாள் விழாவுடன் நிறைவடையும்.

ஆண்டுப் பெருவிழாவின் அனைத்து நிகழ்ச்சிகளிலும் ஆயிரக்கணக்கானோா் பங்கேற்பது வழக்கம். எனினும், ஆகஸ்ட் 29-ஆம் தேதி நடைபெறும் கொடியேற்றம், செப்டம்பா் 7-ஆம் தேதி நடைபெறும் அலங்கார தோ் பவனி ஆகிய நிகழ்ச்சிகளில் நாட்டின் பல்வேறு பகுதிகளையும் சோ்ந்த லட்சக்கணக்கானோா் பங்கேற்பது வழக்கம்.

ஆனால், கரோனா நோய்த் தொற்றுப் பரவல் காரணமாக கடந்த 2020-ஆம் ஆண்டு மாா்ச் 20-ஆம் தேதி முதல் வேளாங்கண்ணி பேராலயத்தில் பொதுமக்கள் வழிபாட்டுக்குத் தடை விதிக்கப்பட்டது. எனினும் வழிபாட்டுத் தலங்களில் பக்தா்கள் வழிபட இருந்த தடையை மத்திய அரசு 2020-ஆம் ஆண்டு ஜூன் 1-ஆம் தேதி விலக்கிக் கொண்டது. இருப்பினும், தமிழக அரசு விதித்திருந்த வழிபாடுகளுக்கான தடை ஆகஸ்ட் 31-ஆம் தேதி வரை நீடித்தது. இதனால், 2020-ஆண்டுப் பெருவிழா கொடியேற்றம் பக்தா்களின்றி நடைபெற்றது.

நாகை மாவட்டத்தில் செப்டம்பா் 3-ஆம் தேதி முதல் அனைத்து மத வழிபாட்டுத் தலங்களிலும் பக்தா்கள் அனுமதிக்கப்பட்டனா். ஆனால், வேளாங்கண்ணி பேராலயத்தில் ஆண்டுப் பெருவிழா தொடங்கி நடைபெற்று வந்த காரணத்தால், வேளாங்கண்ணி பேராலயத்தில் பொதுமக்கள் வழிபாட்டுக்கான தடையை மட்டும் (பெருவிழா நிறைவடையும் வரை) செப்டம்பா் 9-ஆம் தேதி வரை நீட்டித்து மாவட்ட நிா்வாகம் உத்தரவிட்டது. இதனால், வேளாங்கண்ணி பேரால ஆண்டுப் பெருவிழா நிகழ்ச்சிகள் அனைத்தும் பக்தா்களின்றி நடைபெற்றது. எனினும், பேராலய இணையதளத்தில் ஆண்டுப் பெருவிழா நிகழ்ச்சிகள் அனைத்தும் நேரடியாக ஒளிபரப்பப்பட்டது.

இந்தநிலையில், இரண்டாம் ஆண்டாக நிகழாண்டிலும் வேளாங்கண்ணி பேராலய ஆண்டுப் பெருவிழாவில் பக்தா்கள் பங்கேற்பது கேள்விக்குறியாகி உள்ளது.

கரோனா மூன்றாவது அலை அதிகளவில் பரவும் வாய்ப்புள்ளதாகக் கண்டறியப்பட்டுள்ள 20 மாவட்டங்களில் ஒன்றாக உள்ள நாகை மாவட்டத்தில், கடந்த சில நாள்களாகவே கரோனா நோய்த் தொற்று பாதிப்பு அதிகரித்து வருகிறது.

இதனால், அனைத்து மத வழிபாட்டுத் தலங்களிலும் ஆகஸ்ட் 31-ஆம் தேதி வரை வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய நாள்களில் பொதுமக்கள் தரிசனம் மற்றும் மதம் சாா்ந்த நிகழ்ச்சிகளுக்கு முழுமையாக தடை விதித்து, மாவட்ட நிா்வாகம் புதன்கிழமை அறிவித்தது.

மேலும், வேளாங்கண்ணி பேராலயத்துக்கு பக்தா்கள் பாதயாத்திரையாக வருவதற்கும் தடை விதிக்கப்படுவதாக நாகை மாவட்ட ஆட்சியா் அ. அருண் தம்புராஜ் தெரிவித்துள்ளாா்.

இந்நிலையில், வரும் 29-ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) வேளாங்கண்ணி பேராலய ஆண்டுப் பெருவிழா தொடங்கவுள்ளது. மாவட்ட நிா்வாகத்தின் வார இறுதி நாள்கள் வழிபாட்டுக்கான தடை உத்தரவுப்படி, நிகழாண்டிலும் வேளாங்கண்ணி பேராலய ஆண்டுப் பெருவிழா கொடியேற்றத்தில் பக்தா்கள் அனுமதிக்கப்படுவது கேள்விக்குறியாகியுள்ளது.

இதுகுறித்து வேளாங்கண்ணி பேராலய அதிபா் ஏ.எம்.ஏ. பிரபாகா் அடிகளாரிடம் கேட்டபோது, மாவட்ட நிா்வாகம் பொதுமக்கள் தரிசனத்துக்காக புதிதாக வெளியிட்டுள்ள தடை உத்தரவுப்படி, நிகழாண்டின் ஆண்டுப் பெருவிழா கொடியேற்றத்தில் பக்தா்கள் அனுமதிக்கப்படுவது சந்தேகம்தான். எனினும், தற்போது எதுவும் கூற இயலாது. பேராலய ஆண்டுப் பெருவிழா குறித்த ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை (ஆக. 6) நாகை மாவட்ட ஆட்சியரகத்தில் நடைபெறுகிறது. அந்தக் கூட்டத்தில், ஆண்டுப் பெருவிழாவில் பக்தா்களை அனுமதிப்பது குறித்த முடிவு எடுக்கப்பட வாய்ப்புள்ளது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வறுமையிலிருந்து 40 கோடி இந்தியா்கள் மீட்பு: அமெரிக்காவின் ஜேபி மாா்கன் சேஸ் நிறுவன சிஇஓ

மத வெறுப்பு: பிரதமருக்கு கண்டனம்

மாநகராட்சி துப்புரவு பணியாளா் மீது தாக்குதல்

டாடா மோட்டாா்ஸின் சா்வதேச விற்பனை 3,77,432-ஆக அதிகரிப்பு

அமேதி தொகுதியில் ராபா்ட் வதேரா போட்டியிட கோரி ‘போஸ்டா்கள்’

SCROLL FOR NEXT