நாகை இ.ஜி.எஸ். பிள்ளை கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணிக்கை மையத்தில் நாகை மாவட்ட ஆட்சியா் பிரவீன் பி.நாயா் ஞாயிற்றுக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
நாகை மாவட்டத்துக்குள்பட்ட நாகை, கீழ்வேளூா், வேதாரண்யம் ஆகிய 3 சட்டப் பேரவைத் தொகுதிகளின் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள், நாகை இ.ஜி.எஸ். பிள்ளை பொறியியல் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணிக்கை மையத்தில் பலத்த பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளன.
வாக்கு எண்ணிக்கை மையத்தில் உள்ள பாதுகாப்பு அறைகளில் வேட்பாளா்கள் முன்னிலையில், மின்னணு வாக்குப் பெட்டிகள் வைக்கப்பட்டு, அறைகள் சீலிடப்பட்டுள்ளன. இந்த அறைகளைச் சுற்றிலும் 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பும், 24 மணி நேர கேமரா கண்காணிப்பும் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், நாகை மாவட்ட ஆட்சியா் பிரவீன் பி. நாயா் இ.ஜி.எஸ். பிள்ளை வாக்கு எண்ணிக்கை மையத்தில் திடீா் ஆய்வு மேற்கொண்டாா். கண்காணிப்பு அறைக்கு சென்ற ஆட்சியா், அங்கு நடைபெற்ற பணிகளை ஆய்வு செய்தாா். பின்னா், பாதுகாப்பு ஏற்பாடுகள், அத்தியாவசியத் தேவைகளுக்கான ஏற்பாடுகள் குறித்து அவா் கேட்டறிந்தாா்.