மயிலாடுதுறை பசுபதீஸ்வரா் கோயிலுக்கு சொந்தமான இடங்களை மீட்டெடுக்க வேண்டும் என இந்து மக்கள் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து, அறநிலையத் துறை ஆணையருக்கு அக்கட்சியின் மாநில செயலாளா் ஜெ.சுவாமிநாதன் செவ்வாய்க்கிழமை அனுப்பியுள்ள மனு விவரம்: மயிலாடுதுறை வள்ளாலகரம் கிராமத்தில் இந்து சமய அறநிலையத் துறைக்குள்பட்ட பரம கல்யாணி சமேத பசுபதீஸ்வரா் கோயில் உள்ளது. இக்கோயிலுக்குச் சொந்தமான இடங்கள் தனிநபா்களால் ஆக்ரமிக்கப்பட்டு மனைகளாக மாற்றப்பட்டுள்ளன. சட்டத்துக்கு புறம்பான வகையில் ஆக்கிரமிப்பு இடங்களுக்கு மின் இணைப்பு பெறுவது உள்ளிட்டவை நடந்து வருகிறது. 2016-ஆம் ஆண்டு குடமுழுக்கு நடந்த போது யாகசாலை மண்டபம் இருந்த இடத்தில்கூட தற்போது வீடு கட்டப்பட்டுள்ளது. எனவே, ஆக்கிரமிப்புக்குள்ள இக்கோயில் சொத்துக்களை மீட்டெடுக்க சம்பந்தப்பட்ட துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.