சீர்காழி அருகே கிராமப்புறத்தில் கரோனா பரிசோதனை செய்ய ஆர்வமுடன் மக்கள் குவிந்தனர்.
சீர்காழி அருகே எடமணல் ஊராட்சியில் கரோனா பரிசோதனை செய்யப்படுவதாக கிராம ஊராட்சி நிர்வாகம் சார்பில் நேற்று ஒலிபெருக்கி மூலம் அறிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து இன்று எடமணல் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் கரோனா நோய் தொற்று பரிசோதனை முகாம் நடைபெற்றது. கொள்ளிடம் ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் இளங்கோவன் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர் பரிமளா தலைமையில் முகாம் தொடங்கியது.
இதில் கொள்ளிடம் ஒன்றியத்தில் உள்ள அரசு மருத்துவமனை மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் பங்கேற்றனர். இந்த முகாமிற்க்கு அதிக அளவில் கிராம மக்கள் ஆர்வமுடன் வருகைபுரிந்தனர். அவ்வாறு வருகை புரிந்த கிராம மக்கள் சமூக இடைவெளியை பின்பற்றாமல் நீண்ட வரிசையில் காத்திருந்து தங்களது சுய விவரங்களை பதிவு செய்தனர். சுய விவரங்களை பதிவு செய்தவர்களுக்கு பிசிஆர் பரிசோதனை (உமிழ் நீர் பரிசோதனை) செய்யப்பட்டது.
பரிசோதனை செய்வதற்கு அதிக அளவு கிராம மக்கள் திரண்டதால் பரிசோதனை உபகரணங்கள் பற்றாக்குறை ஏற்பட்டது, இதனால் கிராம மக்கள் முகாம் பாதியிலேயே ஏமாற்றத்துடன் திரும்பினர். கரோனா பரிசோதனை செய்வதற்கு கிராமப்புறங்களில் அதிக அளவு வரவேற்பு இருந்தும் பிசிஆர் உபகரணங்கள் பற்றாக்குறையால் கிராம மக்கள் ஏமாற்றத்துடன் திரும்பினர் என்பது குறிப்பிடத்தக்கது.