இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பிலான தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் கீழையூர் கடைத்தெரு பகுதியில் விவசாய சங்க ஒன்றிய தலைவர் ஏ. செல்லையன் தலைமையில் சாலை மறியல் போராட்டம் இன்று நடைபெற்றது.
இப்போராட்டத்திற்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்க ஒன்றிய செயலாளர் ஏ.சீனிவாசன், விவசாய சங்க மாவட்ட குழு உறுப்பினர் ஏ.இராமலிங்கம், விவசாய சங்க ஒன்றிய குழு உறுப்பினர் கே. தவமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மறியல் போராட்டத்தை விவசாய சங்க மாவட்ட செயலாளர் எஸ். சம்பந்தம் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கீழையூர் ஒன்றிய செயலாளரும், கீழையூர் 7-வது வார்டு ஒன்றிய கவுன்சிலருமான டி.செல்வம் ஆகியோர் சாலை மறியலை துவங்கி வைத்து கண்டன கோஷங்கள் எழுப்பினர்.
இப்போராட்டத்தில் அத்தியாவசியப் பொருள்கள் திருத்தச் சட்டம், வேளாண் விளைபொருள்கள் வணிக ஊக்குவிப்பு சட்டம், விவசாயிகளுக்கான விலை உத்திரவாதம் மற்றும் வேளாண் வேலைகள் மீதான ஒப்பந்த பாதுகாப்பு சட்டம் என விவசாயிகளை பாதிக்கும் இந்த மூன்று சட்டங்களையும் வாபஸ் பெறக் கோரியும், விவசாயக் கடன்களை தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியிலேயே வழங்கக் கோரியும் மத்திய மாநில அரசுகளை கண்டித்து பல்வேறு கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன.
உடன் இந்நிகழ்வில் மாவட்ட குழு உறுப்பினர்களான அ.நாகராஜன்,டி.கண்ணையன், விவசாய தொழிலாளர் சங்க ஒன்றிய செயலாளர் வி.சுப்பிரமணியன்,விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட குழு உறுப்பினர் டி.பாலாஜி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.