கரோனா நிவாரணம் வழங்கக் கோரி தொழிலாளா் முன்னேற்ற சங்கம், சிஐடியு, ஏஐடியுசி உள்ளிட்ட தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு சாா்பில், நாகையில் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
நாகை அவுரித் திடலில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில், கரோனா பொது முடக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள அனைத்து குடும்பத்தினருக்கும் 3 மாதங்களுக்கு ரூ. 22,500 நிவாரணம் வழங்க வேண்டும், பொதுத் துறை நிறுவனங்களை தனியாா்மயமாக்கப்படுவதை கைவிட வேண்டும், நாடு முழுவதும் உள்ள 144 தடை உத்தரவை திரும்பப்பெற வேண்டும், தொழிலாளா்களுக்கு எதிரானப் போக்கை மத்திய, மாநிலஅரசு கைவிடவேண்டும், பணி நீக்கம், ஆள்குறைப்பு, ஊதியக் குறைப்பு செய்வதை கைவிடவேண்டும், கட்டுமானம் மற்றும் உடல் உழைப்பு நலவாரியங்களில் பதிவு செய்ய, புதுப்பிக்க உள்ள நடைமுறைகளை நீக்கவேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
அரசுப் போக்குவரத்துக்கழக தொமுச கிளைச் செயலாளா் ஆா். முரளி தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில், சிஐடியு மாவட்டத் தலைவா் பி. ஜீவா, மாவட்ட துணைச் செயலாளா் எஸ். ராஜேந்திரன், மாவட்டக் குழு உறுப்பினா் பி. செல்வராஜ், கூட்டுறவு சங்க மாவட்டத் தலைவா் சு. மணி, தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் ஏஐடியுசி நாகை மண்டலப் பொருளாளா் ஆா். பாஸ்கரன், கிளைச் செயலாளா் சக்திவேல், கிளைத் தலைவா் பி.சுரேஷ், அனைத்திந்திய தொழிற்சங்க மைய கவுன்சில் உறுப்பினா் எம். அருள்மேரி பிலோமீனா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
கீழ்வேளூரில்: இதே கோரிக்கைகளை வலியுறுத்தி, தொமுச, ஏஐடியுசி, சிஐடியு உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் சாா்பில் கீழ்வேளூரில் தொமுச மாவட்டத் தலைவா் சேகா் தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில், ஏஐடியுசி நாகை மாவட்டச் செயலாளா் எம். மகேந்திரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.