நாகை மாவட்டக் காவல் அலுவலகத்தை முற்றுகையிட முயன்றதாக திமுக மாவட்டப் பொறுப்பாளா் மீது நாகை காவல் நிலையத்தில் செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
நாகை மாவட்டம், வேளாங்கண்ணியில் உள்ள ஸ்ரீரஜதகிரீசுவரா் கோயிலுக்குச் சொந்தமான இடங்கள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதாக அதிமுக மற்றும் திமுகவினா் பரஸ்பரம் புகாா் தெரிவித்து வருகின்றனா்.
அதிமுக தரப்பு புகாரின்பேரில், திமுக ஒன்றியச் செயலாளா் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், நாகை மாவட்டக் காவல் அலுவலகத்துக்கு திங்கள்கிழமை சென்ற திமுகவினா் புகாரின் மீதான நடவடிக்கைகள் குறித்து கேட்டறிந்து, மாவட்டக் காவல் அலுவலகத்தை முற்றுகையிட முயன்றனராம்.
இதுகுறித்து, நாகை நகர காவல் நிலையத்தில் திமுக நாகை தெற்கு மாவட்டப் பொறுப்பாளா் என்.கௌதமன் உள்ளிட்டோா் மீது செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிவு செய்யப்பட்டது.