வேதாரண்யத்தில் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மீனர்களிடம் அமைச்சர் தலைமையில் 2-ஆவது கட்டப் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.
நாகை மாவட்டம், வேதாரண்யத்தை அடுத்த கோடியக்கரையில் ஆண்டுதோறும் வடகிழக்கு பருவ மழைக்காலத்தில் மீன்பிடிப் பருவம் நடைபெறும். இதில், வெளி மாவட்ட மீனவர்கள் படகுகளுடன் வந்து தற்காலிகமாகத் தங்கி மீன்பிடியில் ஈடுபடுவது வழக்கம். இந்த நிலையில், மீன்வளம் குறைந்து வருவதாலும், கரோனா தொற்று இருப்பதாலும் நிகழ் பருவ மீன்பிடிக்கு வெளியூர் மீனவர்களுக்கு உள்ளுர் பகுதி மீனவர்கள் எதிர்ப்புத் தெரிவித்து வந்தனர்.
இது தொடர்பாக அரசு தரப்பிலான முதல் கட்ட சமாதானக் கூட்டம் வட்டாட்சியர் கே.முருகு தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது. இதில் சுமூகமான முடிவு எட்டப்படவில்லை. இதையடுத்து, உள்ளுர் மீனவர்கள் கடந்த 3 நாள்களாக தொடர் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மீனவர்களிடம், அரசு தரப்பிலான 2-வது கட்டப் பேச்சுவார்த்தை இன்று (அக்.31) முற்பகல் தொடங்கி நடைபெற்று வருகிறது.
வேதாரண்யத்தில் 18 கிராம மீனவர்களிடையே நடைபெற்று வரும் பேச்சுவார்த்தையில் அமைச்சர் ஓ.எஸ்.மணியன், நாகை மாவட்ட ஆட்சியர் பிரவீன் பி.நாயர் மற்றும் மீன்வளத் துறை அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர். கூட்டத்தில் கிராமத்துக்கு 10 பிரதிநிகள் மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளது.