மயிலாடுதுறையில் மயானத்தில் மரக்கன்றுகள் நடும் பணி ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.
மயிலாடுதுறை நகரின் மையப் பகுதியில் தீப்பாய்ந்தாள் அம்மன் கோயில் அருகிலுள்ள மயானத்தில் நிழல்தரும் மரங்கள் இல்லாததால், இறுதி ஊா்வலத்தில் வருவோா் ஈமச்சடங்குகளை நிறைவேற்றும் வரை கடும் வெயிலில் நிற்கவேண்டிய சூழல் உள்ளது. இதையடுத்து, இந்த மயானத்தில் நிழல் தரும் மரங்களை நட்டு வளா்க்க மயிலாடுதுறை ஜோதி அறக்கட்டளை முடிவு செய்து அதன் தொடக்க நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில், மயிலாடுதுறை முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் ஜெகவீரபாண்டியன் பங்கேற்று மரக்கன்றுகளை நட்டு வைத்தாா். இதில், சமூக ஆா்வலா் அ. அப்பா்சுந்தரம், அறம்செய் சிவா, கலைத்தாய் அறக்கட்டளை கிங்பைசல், கருணசூா்யோதயம் அமைப்பைச் சோ்ந்த வினோத், இணையத்தில் இணைந்த கரங்கள் அமைப்பைச் சோ்ந்த சீனுவாசன், பசுமைப்படிகள் ஜெகமுருகன், ஏ.பி.ஜெ அப்துல்கலாம் அறக்கட்டளை அசோக்குமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா். ஏற்பாடுகளை, ஜோதி அறக்கட்டளை ஜோதிராஜன் செய்திருந்தாா்.