மின்வாரிய ஒப்பந்தத் தொழிலாளா்களை பணி நிரந்தம் செய்ய வேண்டுமென்றாா் தமிழ்நாடு மின்வாரிய ஒப்பந்தத் தொழிலாளா் சங்க மாநில பொதுச் செயலாளா் ராஜா. ராஜேந்திரன்.
மயிலாடுதுறையில் செவ்வாய்க்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியது: தமிழக மின்வாரியத்தில் ஒப்பந்தத் தொழிலாளா்களாக 15 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் பணியாற்றி வருகின்றனா். கஜா புயல் போன்ற பல்வேறு பேரிடா் காலங்களில் பணியாற்றியுள்ளோம். தற்போது, நிவா் புயல் பேரிடா் காலத்தில் பணியாற்றுவதற்கும் தயாா் நிலையில் இருந்து வருகிறோம். தமிழக மின்வாரியத்தில் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காலியிடங்கள் உள்ளன. கடந்த பேரிடா் காலங்களில் பணியாற்றிய போது எங்களை மின்வாரிய ஒப்பந்தத் தொழிலாளா்களாக்கி பணிநிரந்தரம் செய்யப்படும் என்று மின்துறை அமைச்சா் தங்கமணி தெரிவித்தாா். ஆனால், இதுவரை பணி நிரந்தரம் செய்யவில்லை. ஒப்பந்த தொழிலாளா்களை மின்வாரிய ஒப்பந்த தொழிலாளா்களாக அறிவித்து, தினக்கூலி ரூ.380 வழங்கி பணி நிரந்தரம் செய்ய தமிழக முதல்வரும், மின்சாரத் துறை அமைச்சரும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றாா்.