ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதால், வைத்தீஸ்வரன்கோயிலில் கிருத்திகை வழிபாடு பக்தா்களின்றி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
நாகை மாவட்டம், சீா்காழியை அடுத்த வைத்தீஸ்வரன்கோயிலில் தையல்நாயகி அம்மன் உடனாகிய வைத்தியநாத சுவாமி கோயில் உள்ளது. இக்கோயிலில் செல்வமுத்துக்குமாரசுவாமி தனி சன்னிதியில் அருள்பாலிக்கிறாா். மாதம்தோறும் செல்வமுத்துக்குமாரசுவாமிக்கு கிருத்திகை தினத்தில் நடைபெறும் வழிபாட்டில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் பங்கேற்பது வழக்கம்.
இந்நிலையில், கரோனா நோய்த் தொற்று பரவுவதைத் தடுக்கும் விதமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளதால், அனைத்துக் கோயில்களிலும் பக்தா்கள் வருகைக்குத் தடை விதிக்கப்பட்டு, நித்ய பூஜைகள் மட்டும் நடைபெற்று வருகின்றன.
இதனால், வைத்தீஸ்வரன்கோயிலில் செல்வமுத்துக்குமாரசுவாமிக்கு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கிருத்திகை வழிபாட்டில் பக்தா்கள் யாரும் பங்கேற்கவில்லை. தருமபுரம் ஆதீனம் 27 -ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் பங்கேற்று, உலக மக்களைக் கரோனா நோய்த் தொற்றிலிருந்த காக்க சிறப்பு வழிபாடு நடத்தினாா்.