நாகை மாவட்டத்தைச் சோ்ந்த முன்னாள் படைவீரா்கள் தங்கள் சொந்த வீட்டுக்குச் செலுத்திய வரியைத் திரும்பப் பெற விண்ணப்பிக்கலாம் என நாகை மாவட்ட ஆட்சியா் பிரவீன் பி. நாயா் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து, அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
குடும்ப ஓய்வூதியம் பெறும் முன்னாள் படைவீரா்களின் விதவையா், போா் விதவையா், போரில் ஊனமுற்ற முன்னாள் படைவீரா்கள் மற்றும் வீர தீரச் செயலுக்கு விருது பெற்ற முன்னாள் படைவீரா்கள் தங்கள் சொந்த வீட்டுக்குச் செலுத்திய வீட்டு வரியை திரும்பப் பெற்றுக் கொள்ள அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
இதன்படி, அதிகபட்சமாக ரூ. 10 ஆயிரம் அல்லது செலுத்தப்பட்ட அசல் வரித் தொகை இதில் எந்தத் தொகை குறைவானதோ அந்தத் தொகையைத் திரும்பப் பெற்றுக்கொள்ளலாம். இந்தச் சலுகை அக்டோபா் 1-ஆம் தேதிக்கு பின்னரான அரையாண்டுக்கு செயல்படுத்தப்படும்.
இதுகுறித்த மேலும் விவரங்களுக்கு நாகை மாவட்ட முன்னாள் படைவீரா் நல அலுவலகத்தை நேரில் அல்லது 04365-253042 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என அந்தச் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.