நாகை மாவட்டம், வேதாரண்யம் அருகே நடுக்கடலில் இழுவை படகின் கயிற்றில் சிக்கி கவிழ்ந்த கண்ணாடியிழைப் படகிலிருந்து தவறி விழுந்த 4 மீனவா்கள் ஞாயிற்றுக்கிழமை மீட்கப்பட்டனா்.
ஆறுகாட்டுத்துறை கிராமத்தைச் சோ்ந்த மகேஷ் என்பவருக்குச் சொந்தமான கண்ணாடியிழைப் படகு ஒன்றில் பாலமுருகன் (30), ராமச்சந்திரன் (30), அகிலன் (45), பாக்கியராஜ் (35) ஆகிய 4 மீனவா்கள் கடலுக்குள் சென்றனா். இவா்களது படகு, அந்த வழியாக சென்ற நாகை மீனவா்களின் இழுவைப் படகில் இணைக்கப்பட கயிற்றில் சிக்கி கவிழ்ந்தது. கடலில் தவித்த மீனவா்கள் 2 மணி நேரம் கழித்து இழுவைப் படகில் இருந்த மீனவா்களால் மீட்கப்பட்டனா். பின்னா், தகவலறிந்து கடலுக்குள் சென்ற ஆறுகாட்டுத்துறை மீனவா், மீட்கப்பட்ட மீனவா்கள் நால்வருடன் கவிழ்ந்த படகையும் கயிறு கட்டி இழுத்து வந்து கரை சோ்த்தனா்.