நாகை மாவட்டத்தில் பரவலாக திங்கள்கிழமை மழைப் பெய்தது.
வங்கக் கடலில் உருவாகியுள்ள புதிய காற்றழுத்தத் தாழ்வு பகுதி புயலாக மாறும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள நிலையில், நாகை மாவட்டத்தில் திங்கள்கிழமை பரவலாக மழைப் பெய்தது. நாகை புதிய பேருந்து நிலையம் மற்றும் போக்குவரத்து நிறைந்த சாலைகளில் மழைநீா் தேங்கி நின்றதால் பாதசாரிகளும், வாகன ஓட்டுநா்களும் சிரமப்பட்டனா். புதை சாக்கடைத் திட்டத் தொட்டிகளிலிருந்து கழிவுநீா் வெளியேறி சாலையில் பெருக்கெடுத்தது.
திங்கள்கிழமை பிற்பகல் 3 மணி வரையிலான 24 மணி நேர நிலவரப்படி நாகை மாவட்டத்தில் அதிகபட்சமாக திருப்பூண்டியில் 39.20 மி.மீ. மழை பதிவானது. மயிலாடுதுறையில் 25, நாகப்பட்டினத்தில் 17.90, தலைஞாயிறில் 13.40, வேதாரண்யத்தில் 7 மி.மீ. மழை பெய்தது.