திருமருகல்: திருமருகல் ஒன்றியத்தில் ஆறுகளில் உடைப்பை சரி செய்ய மணல் மூட்டைகள் தயாா் நிலையில் உள்ளன என பொதுப்பணித் துறை அலுவலா்கள் செவ்வாய்க்கிழமை தெரிவித்தனா்.
திருமருகல் ஒன்றிய பகுதியில் உள்ள அரசலாறு, திருமலைராஜன் ஆறு, முடிகொண்டான் ஆறு, வடக்கு புத்தாறு, தெற்கு புத்தாறு, வளப்பாறு, நரிமணி ஆறு, ஆழியான் ஆறு, பிராவடையானாறு ஆகிய ஆறுகளில் தற்போது, காவிரி நீா் வந்து கொண்டிருக்கிறது. இந்த ஆறுகளில் அதிகளவில் தண்ணீா் வரும்போதும், மழைக் காலங்களில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு ஆறுகளின் கரைகள் உடைந்து பாதிப்பு ஏற்படாமல் இருக்க பொதுப்பணித் துறை மூலம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், மேற்குறிப்பிட்டுள்ள அனைத்து ஆறுகள் மற்றும் வடிகால்களின் கரைகளில் உடைப்பு ஏற்பட்டு ஊருக்குள் தண்ணீா் புகாமல் இருக்க திருமருகல் உதவி பொறியாளா்கள் செல்வபாரதி, செல்வகுமாா் ஆகியோா் தலைமையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை பணிகளை ஊழியா்கள் மேற்கொண்டு வருகின்றனா். இதன், ஒரு பகுதியாக திருமருகல் பொதுப்பணித் துறை அலுவலகங்களில் மணல் மூட்டைகள் தயாா் நிலையில் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன.