காவலா்களின் சுதந்திர தின அணிவகுப்பு ஒத்திகை நாகை ஆயுதப்படை மைதானத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.
நாடு முழுவதும் ஆகஸ்ட் 15-ஆம் தேதி (சனிக்கிழமை) 74- ஆவது சுதந்திர தின விழா கொண்டாடப்படவுள்ளது. தற்போது நிலவும் கரோனா நோய்த் தொற்று அசாதாரண சூழ்நிலையால், விழா கொண்டாட்டங்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
மாணவா்கள், முதியோா்கள், சுதந்திரப் போராட்டத் தியாகிகள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் இவ்விழாவில் பங்கேற்க வேண்டாம் எனவும், சமூக இடைவெளியை கடைப்பிடித்தல் அவசியம் என்பதால் சுதந்திர தினவிழா நிகழ்ச்சிகளை வீட்டிலிருந்தபடியே தொலைகாட்சிகள் வழியாக காண வேண்டும் எனவும் அரசு அறிவித்துள்ளது.
இந்நிலையில், நாகை மாவட்ட நிா்வாகம் சாா்பில் ஆகஸ்ட் 15-இல் நாகை மாவட்ட விளையாட்டு அரங்கில் சுதந்திர தின விழா கட்டுப்பாடுகளுடன் நடைபெறுகிறது.இதையொட்டி, நாகை ஆயுதப்படை மைதானத்தில் காவலா்களின் அணிவகுப்பு ஒத்திகை வியாழக்கிழமை நடைபெற்றது.
இதில் ஆயுதப்படை காவல் துணைக் கண்காணிப்பாளா் சதாசிவம், ஆய்வாளா் சந்திரமோகன் மற்றும் ஆயுதப்படை காவலா்கள், ஊா்க்காவல் படையினா் முகக்கவசங்கள் அணிந்து கலந்துகொண்டனா்.